Pages

Sunday, 21 February 2016

கண்ணையா குமார் முழக்கம்.! தீப்பொறி பறக்கும் முழு உரை -கலி. பூங்குன்றன்





பார்ப்பனீயத்திலிருந்து விடுதலை
மனுதர்மத்திலிருந்து விடுதலை..
மனுதர்ம ஆட்சியிலிருந்து விடுதலை..
சங்பரிவார அடிமைகளிடமிருந்து விடுதலை..
காவி குண்டர்களிடமிருந்து விடுதலை..
நிலப்பிரபுத்துவ ஆட்சியிலிருந்து விடுதலை..
கார்ப்ரேட்டுகளிடமிருந்து விடுதலை..

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் தேசத் துரோகக் குற்றம் புனையப்பட்டு சிறையிலிருக்கும் கண்ணையா குமார் முழக்கம்! தீப்பொறி பறக்கும் முழு உரை கீழே....


யார் தேசத் துரோகி?


“ஜாதியின் கலாச்சாரத்தை, மனு நீதியை பார்ப்பனீயத்தை அழித்தொழிக்கக் கிளம்பி விட்டோம்!’’


காவிகள்தான் இந்தியாவின் தேசியக்கொடியை எரித்தவர்கள். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் அவர்கள். அரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக அரசு பகத்சிங் பெயரைத் தாங்கியிருந்த விமான நிலையத்திற்கு ஒரு சங்பரிவாரைச் சேர்ந்த நபரின் பெயரைச் சூட்டியுள்ளது.


எங்களுக்கு தேசபக்தி சான்றிதழை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தர வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். இவர்கள் நம்மைத் தேசியவாதிகள் என்று அங்கீகரிக்கத் தேவையில்லை. நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சத விகித ஏழைகளுக்காக நாம் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்த வரை தேசத்தை வழிபடுவது ஆகும்.


மனுவின்மீது நம்பிக்கை இல்லை


நாங்கள் அண்ணல் அம்பேத்கர் மீது முழுப்பற்று வைத்திருக்கிறோம். எங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. இதை நாங்கள் சொல்வதன் பொருள் அரசமைப்புச் சட்டத்தை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவார்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.


எங்களுக்கு இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான ஜந் தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித் தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்த தேசத்தின் ஜாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுமில்லை.


ஜாதியமைப்பால் ஏற்பட்ட கடும் அநீதியைச் சீர் செய்வதற்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அரசமைப்புச் சட்டமும், அண்ணல் அம்பேத்கரும் பேசுகிறார்கள். அதே அண்ணல் அம்பேத்கர் தூக்குத் தண்டனையை நீக்க குரல் கொடுக்கிறார். அவரே கருத்துரிமை குறித்தும் பேசுகிறார். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, நம்முடைய உரிமையை உயர்த்திப் பிடிக்க நாம் விரும்புகிறோம்.


நமக்கு எதிராகத் தங்களின் ஊடக நண்பர்களோடு இணைந்துகொண்டு பொய்ப் பிரச் சாரத்தை நிகழ்த்தி வருகிறார்கள். நாம் கல்வி உதவித் தொகைக்காகப் போராடுவோம் என்று சொல்கிறார்கள். ஸ்ம்ருதி இரானி கல்வி உதவித் தொகையை நிறுத்துவார். இவர்கள் போராடுவதாகச் சொல்வார்கள். நல்ல வேடிக்கை. இந்த அரசு, உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 17 சதவிகிதம் குறைத்துள்ளது.


நமக்கு விடுதிகள் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டப்படவில்லை. WIFI இணைப்பு தரப்படவில்லை. BHEL நிறுவனம் நம்முடைய பயணத்துக்குப் பரிசளித்த பேருந்துக்குப் பெட்ரோல் போட கூடப் பல்கலை நிர்வாகத்திடம் காசில்லை. சினிமா சூப்பர் ஸ்டார் போல, 'நாங்கள் விடுதிகளைக் கட்டிக் கொடுப்போம், WIFI இணைப்புத் தருவோம், உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்வோம்' என்று -ABVP யினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.


வெறி பிடித்த ஏபிவிபியே நேர்முகமாக விவாதிக்கத் தயாரா?’’


இவர்களின் உண்மையான சொரூபம், நாட்டின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க அழைத்தால் அம்பலமாகி விடும். நாம் மாணவர்களாகப் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளை எழுப்புகிறோம் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன்.


ஆகவேதான் அவர்களின் சுப்ரமணிய சாமி, இங்கே ஜிஹாதிகள் வாழ்வதாக, நாம் வன்முறையைப் பரப்புவதாகச் சொல்கிறார்.


JNU வின் சார்பாக நான், ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை நோக்கி சவால் விடுகிறேன். வன்முறையைப் பற்றி நேருக்கு நேர் விவாதம் புரிவோம். வெறிபிடித்த முழக்கங்கள் குறித்துக் கேள்விகள் கேட்போம். ரத்தத்தில் திலகமிட வேண்டும் என்றும், துப்பாக்கிக் குண்டுகளில் ஆரத்தி எடுப்போம் என்றும் ஏன் முழக்கமிடுகிறார்கள் என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.


யாருடைய ரத்தம் சிந்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்? ஆங்கிலேயரோடு கைகோர்த்துக் கொண்டு விடுதலைப் போராட்ட வீரர்களைச் சுட்டார்கள், ஏழைகள் பசிக்கு சோறு கேட்ட பொழுது அவர்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் மவுனமாக்கினார்கள். பசியுற்றவர்கள் உரிமைகளைக் கேட்ட பொழுது ஆயுதங்களால் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். முஸ்லீம்கள் மீது அவர்களின் குண்டுகள் பாய்ந்தன. பெண்கள் சம உரிமை கேட்ட பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கினார்கள்.


தொழிலாளியும், அம்பானியும் சமமானவர்களே!


அய்ந்து விரல்களும் ஒன்றாக இருக்க முடியாது என்கிறார்கள். சீதையைப் பின்பற்றிப் பெண்கள் அக்னிப் பரீட்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த நாட்டின் ஜனநாயகம் எல்லாருக்கும் சம உரிமைகள் தருகிறது. மாணவன், தொழிலாளி, ஏழை. பணக் காரன், அம்பானி, அதானி எல்லாரும் சம உரிமை கொண்டவர்களே! 'பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும்' என நாங்கள் குரல் கொடுத்தால், இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.


“என் தாயை இழிவாகப் பேசுகிறீர்களே உங்கள் பாரதமாதாவில் என் தாய்க்கு இடமில்லையா?’’


என்னுடைய அலைப்பேசியை நீங்கள் பாருங்கள். என் தாய், தங்கையைப் பற்றி நாக்கூசும் வசைகளை வீசுகிறார்கள். எந்தப் பாரதத்தாயை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.? அதில் என்னுடைய தாய்க்கு இடமில்லை என்றால் உங்களின் பாரத மாதா பற்றிய கருத்தாக்கம் எனக்கு ஏற்புடையது இல்லை.


அங்கன்வாடியில் மாதம் 3000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்னுடைய அம்மாவை இவர்கள் வசைபாடுகிறார்கள். ஏழைகளின் தாய்களை, தலித் விவசாயிகளைப் பாரதத் தாயின் அங்கமாகப் பார்க்காததை நினைத்து அவமானப்படுகிறேன்.


நான் இந்தத் தேசத்தின் தந்தைமாரை, தாய்மார்களை, சகோதரிகளை, ஏழை விவசாயிகளை, தலித்துகளை, பழங்குடி யினரை, தொழிலாளிகளைப் போற்றுவேன். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்றோ, 'பகத் சிங் ஜிந்தாபாத்', 'சுகதேவ் ஜிந்தா பாத்', 'அஸ்பஹூல்லா கான் ஜிந்தாபாத்' 'பாபாசாகேப் அம்பேத்கர் ஜிந்தாபாத்' என்றோ முழங்க முடியுமா? என்று சவால் விடுகிறேன்.


அண்ணல் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடும் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்கு வீரம் இருந்தால், அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை அவர்களும் எழுப்ப வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களில் ஜாதி முக்கியமானது. ஜாதி அமைப்பைப் பற்றிப் பேசுங்கள்,


ஒவ்வொரு துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசுங்கள். இந்தக் கேள்விகளை நீங்கள் எழுப்பினால் உங்களுக்கு இந்தத் தேசத்தின் மீது பக்தி இருக்கிறது என நான் நம்புகிறேன். இந்த தேசம் அப்பொழுதும் எப்பொழுதும் உங்களுடையதாக ஆகாது. ஒரு தேசம் அதன் மக்களால் ஆனது, உங்களின் தேசத்தில் ஏழைகள், பசித்த மக்கள் ஆகியோருக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒன்று தேசமே இல்லை.


நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மிக மோசமான காலத்தில் இருக்கிறோம் என்றேன். பாசிசம் நாட்டைப் பிடித்துக் கொண்டே வருகிறது. ஊடகமும் அதிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. ஊடகம் எப்படிப் பேசவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து கதைகள் அனுப்பப்படுகின்றன. காங்கிரஸ் நெருக்கடி நிலை நிலவிய காலத்தில் செய்த அதே வேலையை இப்பொழுது இவர்கள் செய்கிறார்கள்.


“அய்தராபாத்தில் நடந்ததை டில்லியில் நடக்க விடோம்!’’


சில ஊடக நண்பர்கள் நம்முடைய பல்கலைக் கழகம் மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில் இயங்குவதைச் சுட்டிக் காட்டினார்கள். அது உண்மையே. நான் ஒரே ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: 'எதற்காகப் பல்கலைக் கழகங்கள்?' ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் தயவு தாட்சண்யமில்லாமல் பகுப்பாய்வு செய்யப் பல்கலைக்கழகங்கள் அவசியமானவை.


தங்களின் கடமையிலிருந்து பல்கலைக்கழகங்கள் தவறினால் ஒரு தேசம் உயிர்த்திருக்காது. ஒரு தேசம் ஏழைகளுக்காக இயங்கவில்லை என்றால் அது பணக்காரர்களின் சுரண்டல், கொள்ளைக்காரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும்.

மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை உள்வாங்காமல் ஒரு தேசம் உருவாக முடியாது.


நாம் பகத்சிங்கின், அண்ணல் அம்பேத்கரின் கனவுகளுக்கு ஆதரவாக, உறுதியாக நிற்கிறோம். சம உரிமைக்காக, அனைவரும் தன்மானத்தோடு வாழ்வதற்கு ஆதரவாக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளின் போராட்டத்துக்காக ரோஹித் வெமுலா உயிர்விட நேர்ந்தது. சங்பரிவாரத்தினரிடம் நேராகச் சொல்கிறோம், 'உங்கள் அரசால் அவமானம்!'. ரோஹித் வெமுலாவுக்கு என்னென்ன அநீதிகளைச் செய்தீர்களோ அது எதையும் நீங்கள் செய்ய முடியாது. ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் மறக்கமாட்டோம். நாங்கள் கருத்துரிமைக்குத் தோள் கொடுப்போம்.


பாகிஸ்தான், வங்கதேசத்தை விடுத்து மற்ற எல்லா நாட்டு ஏழைகள், பாட்டாளிகள் ஆகியோரின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதநேயத்தை, இந்திய மனித நேயத்தை நாங்கள் துதிக்கிறோம். நாங்கள் மனிதத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டியுள்ளோம்.


இதுவே நம் முன்னால் உள்ள மிகப் பெரிய பிரச்சினை. சாதியத்தின் உண்மை முகத்தை, மனுவின் முகத்தை, பார்ப்பனீயம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த அயோக்கியத்தனமான முகங்களைத் தோலுரிக்க வேண்டும். நாம் உண்மையான விடுதலையை அடையவேண்டும். அந்த விடுதலை அரசமைப்புச் சட்டத்தின் மூலம், நாடாளுமன்றத்தின் மூலமே சாத்தியம். அதை நாம் அடைந்தே தீருவோம்.


தலித்துகளை ஒடுக்குவதும் வன்முறைதான்!


நம்முடைய எல்லா முரண்பாடுகளையும் தாண்டி நம்முடைய கருத்துரிமையை, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, இந்தத் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்க வேண்டும் நண்பர்களே என வேண்டிக் கொள்கிறேன். நம்முடைய தேசத்தைப் பிளவுபடுத்தும் இந்தச் சக்திகளை, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் இவற்றுக்கு எதிராக அணிதிரண்டு நாம் உறுதியோடு போராடவேண்டும்.


என்னுடைய உரையை முடிக்கும் முன்னால் ஒரு இறுதி வினா. யார் இந்த கசாப்? யார் இந்த அப்சல் குரு? இந்த கேள்விகளைப் பல்கலைக் கழகங்களில் எழுப்பா விட்டால் பல்கலைகளின் இருப்பில் பொருளில்லை. நீதியை, வன்முறையை நாம் வரையறுக்காவிட்டால், எப்படி வன்முறையை நாம் எதிர்கொள்வது? வன் முறை என்பது ஒருவரைக் கொல்வது மட்டுமில்லை, தலித்துகளுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுக்கும் நிர்வாகம் நிகழ்த்துவதும் வன்முறையே ஆகும்.


இது நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையாகும். நீதியைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது.? பிராமணியம் தலித்துகளைக் கோயில்களுக்குள் விடவில்லை. அதுவே அன்றைய நீதி. அதனை நாம் கேள்வி கேட்டோம். இன்றைக்கு , ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆகியோரின் நீதி, சுதந்திரம் நம்மை உள்ளடக்கிய நீதி இல்லை என்பதால் அதனைக் கேள்வி கேட்கிறோம்.


ஒவ்வொரு மனிதனுக்கும் சட்ட ரீதியான உரிமைகள் உறுதி செய்யப்படும் பொழுது நாங்கள் உங்களின் விடுதலையை ஏற்கிறோம். எல்லாருக்கும் சம உரிமை வாய்க்கும் நாளில் அவர்களின் நீதியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.


நண்பர்களே, இது ஒரு மோசமான சூழல். மாணவர் கூட்டமைப்பு எப்பொழுதும் வன்முறையை, எந்த ஒரு தீவிரவாதியையும், எந்தத் தீவிரவாத செயலையும், இந்தியாவுக்கு எதிரான எந்த செயலையும் ஆதரித்தது இல்லை. பெயர் தெரியாதவர்களால் எழுப்பப்பட்ட 'பாகிஸ்தான் வாழ்க!' என்கிற முழக்கத்தை நம்முடைய மாணவர் அமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது.


ABVP ஆட்களைப் பற்றி ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்காக நான் கவலை கொள்கிறேன். FTIIல் கஜேந்திர சவுகானை கொண்டுவந்ததைப் போல எல்லா நிறுவனங்களிலும் தங்களின் ஆட்களைக் கொண்டு நிரப்பலாம் என்று அவர்கள் குதிக்கிறார்கள். சவுகானை போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் தங்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும் என்று கனவு காணுகிறார்கள்.


வேலை கிடைத்ததும் இந்தத் தேசபக்தி, பாரதமாதா ஆகியவற்றை அப்படியே மறந்துவிடுவார்கள். அவர்கள் எப்பொழுதும் மதிக்காத மூவர்ண்ணக் கொடியைப் பற்றி என்ன சொல்வது? இப்படியே போனால் தங்களுடைய காவிக் கொடியை கூட அவர்கள் மறக்க நேரிடும்.


எப்படிப்பட்ட தேசபக்தியை அவர்கள் விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன். தன்னுடைய தொழிலாளிகளிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாத முதலாளி, விவசாயக் கூலிகளை மரியாதையோடு நடத்தாத நிலச்சுவான்தார், அதிகச் சம்பளம் பெறும் ஊடக தலைமை அதிகாரி, தன்னுடைய நிருபர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தைத் தருவார் என்றால் இவையெல்லாம் எப்படித் தேசபக்தி ஆகும்?


அவர்களின் தேசபக்தி இந்திய -_ பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிவுற்று விடுகிறது. அதற்குப் பிறகு சாலையில் இறங்கி வம்பு செய்வார்கள். ஒரு டஜன் பழத்தை நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஏழையைக் கொள்ளையடிப்பதாகச் சொல்லி, முப்பது ரூபாய்க்கு, ஒரு டஜன் பழத்தைக் கேட்பார்கள்.


'நீங்கள்தான் உண்மையான கொள்ளையர்கள்' என அந்த வியாபாரி சொன்னால், உடனே அந்த ஏழையைத் தேசத் துரோகி என்று அறிவித்து விடுவார்கள். வசதிகள், பணம் ஆகியவற்றோடு தேசபக்தி துவங்கி முடிந்துவிடுகிறது. உண்மையிலேயே தேசபக்திதான் இவர்களைச் செலுத்துகிறதா என்று கேட்டேன். 'என்ன செய்வது தோழா..?


ஏற்கெனவே இரண்டு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இருக்கிற மூன்று ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்துமுடிக்க வேண்டும்' என்று சொல்கிறார்கள்.


அவர்களிடம் அந்தச் சில நபர்களும், தாங்கள் 'பாகிஸ்தான் ஜிந்தா பாத்' என்று முழக்கம் போடவில்லை எனச் சொல்வதாகவும், அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்துங்கள். அவர்கள், 'ஏன் முதலில் கூட்டத்துக்கு அனுமதி தரப்பட்டு, பின்னர் அது மறுக்கப்பட்டு ஜனநாயக உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டது?' என்றே கேட்கிறார்கள் எனத் தெரிவியுங்கள்.


ஒரு ஜனநாயகப் போராட்டம் நடை பெறுகிறது என்றால், அதில் உறுதியாக அந்தச் சிலபேர் நிற்பதாக அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு இவை எதுவும், எப்பொழுதும் புரியப்போவதில்லை. ஆனால், குறுகிய கால அழைப்பில் இங்கே பெருமளவில் கூடிய நீங்கள் பிரச்சனையைப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன்.


நீங்கள் வளாகம் முழுக்கச் சென்று ABVP தேசத்தையும் -JNUவையும் பிளவு படுத்துகிறது. அதை நடக்க விட மாட்டோம். இதை மாணவர்களிடம் சொல்லுங்கள்.


ஜெய் பீம்! செவ்வணக்கம்!

இந்தியில் இருந்து நேரடியாக

தமிழில் மொழி பெயர்ப்பு:

சரவணா ராசேந்திரன்


நமது எதிரிகள் யார்? யார்?


நாம் சுரண்டலின் கலாச்சாரத்தை, ஜாதியின் கலாச்சாரத்தை, மனுநீதி, பார்ப்பனீயம் ஆகியவற்றின் கலாச்சாரத்தை அழித்தொழிக்க விழைகிறோம். எது கலாச்சாரம் என்பது இன்னமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினால், அவர்களுக்குக் கோபம் வருகிறது.


அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என இருவரையும் வணங்கி, அவர்களைப் பற்றிப் பேசுவது அவர்களை உசுப்பேற்றுகிறது. மக்கள் அஸ்பஹூல்லாகான் எனும் தீரமிகுந்த விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிப் பேசினால் கொதிக்கிறார்கள். இவற்றைப் பொறுக்கமுடியாமல் சதி செய்கிறார்கள்.


அவர்கள் ஆங்கிலேயருக்குச் சேவகம் புரிந்த கீழானவர்கள். என் மீது அவதூறு வழக்கு பதியும்படி அவர்களுக்குச் சவால் விடுகிறேன். நாட்டை அடிமைப்படுத்திக் கொடுமை செய்த ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை வசதியாக மறைத்துவிட்டு, இப்பொழுது தேசபக்தி சான்றிதழ் விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள்.


நாங்கள் குடிமக்களா - நாய்களா?


நான் உங்களிடம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே. அது யிழிஹி நிர்வாகம் பற்றியதாகும். கிஙிக்ஷிறி தற்போது எழுப்பிய முழக்கங்களைக் கவனித்தீர்களா? அவர்கள் நம்மைக் 'கம்யூனிஸ்ட் நாய்கள்',' அப்சல் குருவின் நாய்கள்', 'ஜிஹாதிகளின் பிள்ளைகள்' என்று அழைக்கிறார்கள்.


நமக்கு அரசமைப்புச் சட்டம், குடிமகன் என்கிற உரிமையை உறுதியளித்திருக்கும்பொழுது நம்முடைய பெற்றோரை நாய்கள் என அழைப்பது நம்முடைய அரசமைப்புச் சட்ட உரிமை மீதான தாக்குதல் இல்லையா? இதை - நிர்வாகம் அரசு, ஆகியோரிடம் கேட்க விரும்புகிறேன். நிர்வாகம், யாருக்காக, யாருடன் இணைந்து கொண்டு, எதன் அடிப்படையில் இயங்குகிறது என்று அறிய விரும்புகிறோம்.


முதலில் கூட்டத்துக்கு அனுமதி தந்த பல்கலை. நிர்வாகம், நாக்பூரில் இருந்து அழைப்பு வந்ததும் அலறி அடித்துக் கொண்டு அனுமதியை ரத்து செய்கிறது. முதலில் உதவித்தொகை அறிவித்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்வார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்., நம் நாட்டை நடத்த விரும்பும் முறையாகும்.


‘ஓம் கொடி ஏந்தி வருவார்கள்’ - எச்சரிக்கை!


நான் அவர்களைக் கேட்கிறேன். நாளைக்குத் தொடர் வண்டியில் நீங்கள் பயணிக்கிற பொழுது, கிஙிக்ஷிறிஅய் சேர்ந்த நபர்கள் மாட்டுக் கறியை யாரேனும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்க -யிழிஹிவைச் சேர்ந்தவர் எனத் தெரிந்ததும் உங்களைத் தேசத்துரோகி என்று சொல்லி வெட்டிப் போட்டால் என்னாகும்? இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா எனக் கவலையோடு கேட்கிறேன்.


அந்த ஆபத்தை உணர்ந்திருப்பதால்தான் ‪#‎யிழிஹிஷிலீutபீஷீஷ்ஸீ‬முழக்கத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய பதற்றமான சூழலின் இறுதியில், தாங்கள் யிழிஹிவில்தான் கல்வி கற்க வேண்டும் என்று உணர்கிறார்கள். அதனால் யிழிஹிவின் சக தோழர்களே மார்ச்சில் தேர்தல் வருகிறது. அப்பொழுது ஓம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு ஆட்கள் வாக்கு கேட்க வருவார்கள்.


அவர்களிடம் கேளுங்கள்: 'நாங்கள் ஜிஹாதிகள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், எங்கள் வாக்குகளைப் பெற்றால் நீங்களும் தேசத் துரோகிகள் ஆகிவிட மாட்டீர்களா?' எனக் கேள்வி கேளுங்கள். அப்பொழுது அவர்கள், 'உங்களில் சிலர் மட்டுமே அப்படிப்பட்டவர்கள்' என்பார்கள். பின் ஏன் இதை ஊடகங்களிடம் அவர்கள் சொல்லக்கூடாது என்றும், அவர்களின் துணை வேந்தர், பதிவாளரும் ஏன் அதை ஊடகங்களிடம் சொல்லவில்லை என்றும் எதிர் கேள்வி கேளுங்கள்.

-கலி. பூங்குன்றன்
[] [] []

No comments:

Post a Comment